எழுத்துக்கள்…!


இப்போதிருக்கும்
எந்தக் கண்ணும்
காணாத காலத்திலேயே
நாங்கள் கர்ப்பமாகிவிட்டோம்
ஆனாலும்…
இன்னும்
பிறந்துகொண்டேதான்
இருக்கிறோம்.


எங்களுக்கு
உயிருண்டு– ஏன்?
மெய்யுமுண்டே
உயிர், மெய் வந்தால்தானே
உண்மையான நிறைவு
அதுவும் உண்டே


இலக்கியம்தான் எங்கள்
இலக்குகள்
அங்கேதான் - நாம்
எழுகிண்றோம்
ஏன்? சிலவேளைகளில்
ஆதற்குள்ளேயே
அழுகிண்றோம்
நாங்கள்….
எழுவதும் விழுவதும் - அந்த
எழுத்தாளனைப் பொறுத்தது
காகிதக் கப்பல் கொண்டு
எங்களை….
கரைசேர்ப்பவன் அவனல்லவா!


நாங்கள் இன்னும்
காலமாகாது இருப்பதும் கூட
அவனால்தான்


கவிதை…
எம் தரணி தாஜ்மகால்
பட்ட பொழுதுக்கு
வட்ட நிலா எப்படியோ
அப்படிதத்தான் - எமக்கு
கவிதை


மரபுக் கவிதையில்
எங்கள்…
இதய அடிப்புக் கேட்கும் - அதில்
கற்றவருக்குத்தான்
எங்கள்…
 கருத்துக்கள் தெரியும்
மற்றவருக்கு– வெறும்
லப் டப் மட்டுமே
குழந்தையின்
கெஞ்சுதலைப் போல
ஒப்பனையில்லாத
புன்னகையை– நாங்கள்
புதுக்கவிதையில் 
புரிகின்றோம்


அப்பட்டமான
ஆனந்தத்தையும் - ஏன்
புழுக்கத்தையும் கூட
அதில்தான் பூட்டுவோம்
எப்படியாயினும்
நாங்கள்… எழுத்துக்கள் - ஆமாம்
இறந்த காலத்தை எதிர்காலத்துக்கு
காவிச்செல்லும்
எறும்புகள் நாங்கள்

Categories: , Share

Leave a Reply